தீங்கை விளைவிக்கும் புகைத்தல்
இன்று புகைத்தல் பழக்கம் சர்வசாதாரணமாகி சமூகத்தின் வயது வந்தவர்களையும்
கடந்து பாடசாலை செல்லும் இளைஞர்கள் மத்தியிலும் அதிகமதிகம்
இழையோடிக் காணப்படுவது கவலை
தரும் அம்சமாகும். அதேநேரம், அதுவே ஒரு
கலாசாரமாகவும் பருவ வயதை அடைகின்ற போது
நாகரீகமாகவும் சமூகத்தின்
முதுகெலும்புகளான இளைஞர் சமூகத்தின் நடத்தைகளுடன் இரண்டறக் கலந்திருப்பது
சமூகத்தின் உயிர்த்துடிப்பை நசுக்கும் நச்சுத்தன்மை வாய்ந்த செயலாகும்.
சமூகத்தில் எழுப்பப்படும் எதிர்மறையான சுயகருத்துகளும் அப்பால் இவ்வாக்கம் இஸ்லாத்தின் நிழலில் புகைத்தல் தொடர்பாக விரிவாகப்
பேசுகின்றது.
புகைத்தல் பழக்கம் நபி (ஸல்) அவர்களது காலத்தில் இடம்பெற்ற ஒன்றல்ல. பிற்பட்ட காலத்தில் அது தோன்றிய போது அதன் யதார்த்தத்தையும்
தீங்குகளையும் அறிஞர்களால் உடன்
முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.
என்றாலும் பெரும்பாலான இஸ்லாமிய அறிஞர்கள்
புகைத்தல் உண்மையில் ஆரோக்கியத்துக்கு
அச்சுறுத்தலாகவுள்ளது என்பதை உணர்ந்து
‘புகைத்தல் ஹராம்’ என்றே
தீர்ப்பளித்துள்ளனர்.
“தீங்கிழைக்கக்கூடிய அனைத்தும் ஹராம்” என்பது
இஸ்லாத்தின் அடிப்படை விதிகளுள்
ஒன்றாகும். இவ்வகையில் புகையிலையும் கூட
மனிதனது உடல் மற்றும் பொருளாதார நலன்களுக்கு கேடு
விளைவிப்பதால் ஹராமானவற்றின் பட்டியலிலேயே உள்ளடக்கப்படுகின்றது. அல்குர்ஆன், சுன்னா, இஜ்மாஃ கியாஸ்
முதலிய சட்ட மூலாதாரங்களினூடாக இது நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீங்கள் உங்களை அழித்துக்கொள்ள வேண்டாம். நீங்கள் நன்மையே புரியுங்கள். நன்மை புரிபவர்களே அல்லாஹ் நேசிக்கின்றான். (பகரா-195)
இவ்வசனம் மனிதனுக்கு தீங்கின் பக்கம் இட்டுச் செல்லும் அனைத்தையும் தடை
செய்வதாக அமைகின்றது. இவ்வகையில் மனிதனை தீங்கிற்கு உட்படுத்தும்
புகைத்தல் உட்பட கண்ணாடி, கல், விஷம் போன்று எவற்றையெல்லாம் உட்கொள்வதால் தீங்கேற்படுமோ
அவற்றையெல்லாம் உண்பது ஹராமாகும். அருவருக்கத்தக்கவற்றைத் தவிர எவற்றையெல்லாம்
உட்கொள்வதன் மூலம் தீங்கேற்படாதோ அவற்றை உண்பது ஹலாலாகும் என இமாம் நவவீ ‘அர்ரவ்ழா நதிய்யா’ எனும் நூலில் விளக்குகின்றார்.
“நீங்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ்
உங்கள் மீது மிகவும் கருணையுடையவனாக இருக்கின்றான்.” (அந்நிஸா 29)
அதேநேரம் புகைத்தல் (தடுக்கப்பட்ட) ‘ஃபாஹிஷா’ என அல்குர்ஆன் குறிப்பிடும் மிக மோசமான
அருவருக்கத்தக்க பாவங்களுள் ஒன்றாகும். மேலும் சிறந்தவற்றையே புசிக்குமாறும், அவையல்லாதவற்றைத்
தவிர்ந்து கொள்ளுமாறும் வலியுறுத்தி பல வசனங்கள் திருமறையில் இடம் பெற்றுள்ளன.
“மக்களே! பூமியில் நீங்கள் ஹலாலான, சிறந்தவற்றையே
உட்கொள்ளுங்கள்!” (பகரா)
“தூதர்களே! நல்லதையே புசித்து நற்காரியங்களைப் புரியுங்கள்!” (முஃமினூன்)
விசுவாசிகளே! நாம் உங்களுக்கு அளித்ததில் சிறந்தவற்றையே உண்ணுங்கள்!” (பகரா)
மேலும், மோசமானவை, அசிங்கமானவை பற்றியும் அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான். “மோசமானவை அதிகமாக
இருந்த போதிலும், நல்லதும், மோசமானதும் ஒரு போதும் நிகராகமாட்டாது. அறிவுள்ளவர்களே! ஜெயம் பெற அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்!
(மாயிதா - 100)
எனவே சிறந்தவை எப்போதும் சிறந்தவைதாம். மோசமானவை என்றும் மோசமானவைதாம். இவை
இரண்டும் ஒருபோதும் ஒன்றாயிருக்க முடியாது. சுத்தமான மனித வாழ்வுக்கு
பயன்மிக்க சிறந்த விடயங்கள் அனைத்தும் ஹலால் எனவும் அழுக்கான தீங்கு பயக்கின்ற
மோசமான அனைத்தும் ஹராம் எனவும் ஒரு சட்ட விதி குறிப்பிடுகின்றது.
மேற்குறித்த இவ்விதியானது உணவாகவும்,
பானமாகவும் கொள்ளப்படுகின்ற
அனைத்துக்கும் பொருந்துவதாக அமையும். அதேநேரம், மேற்சொன்ன குர்ஆன்
வசனத்தில் “மோசமானது” எனும்
அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ‘கபீஸ்’ எனும் சொல்
வெருக்கத்தக்க சுவையும் வாசனையும் கொண்ட அருவருக்கத்தக்க ஒன்றைக் குறிக்க அரபு
மொழியில் பயன்படுத்தப்படுகிறது.
இதன் பின்புலத்தில் புகைத்தல் என்பது தீங்கிழைக்கின்ற அதேவேளை
பிரயோசனமற்றதாகவும் உள்ளது. பிரயோசனமற்ற ஒன்றிலே செல்வத்தை வீண்விரயம் செய்வது ‘ஹராம்’ என்பது தெளிவானதே.
“உண்ணுங்கள்,
பருகுங்கள். வீண்விரயம் செய்யாதீர்கள்.”
இவ்வசனத்தில் அல்லாஹ்த்தஆலா வீண்விரயம் செய்வதைத் தடுத்துள்ளான். இது ஹராமான விடயங்களுக்காக செலவு செய்வதையோ அநாவசியமாக செலவளிப்பதையோ, அளவு மீறி
செலவளிப்பதையோ குறிக்கலாம். மற்றுமோர் இடத்தில்....
“நீங்கள் வீண்விரயம் செய்ய வேண்டாம்.” (இஸ்ராஃ - 26)
வீண்விரயம் என்பது பின்வருனவற்றை உணர்த்துகின்றது.
01.
செல்வத்தை ஹராமான ஒன்றில் செலவு செய்தல்.
02.
செல்வத்தை பிரயோசனமற்ற, அவசியமற்ற விடயங்களில்
செலவு செய்தல்.
03.
செல்வத்தை அளவுக்கதிகமாக விரயம் செய்தல்.
(ஆகுமான விடயங்களிலும் சரியே..)
மேலும் அல்லாஹ்வுக்கு மாறு செய்கின்ற சீர்கேட்டை ஏற்படுத்துகின்ற அநியாயமான விடயங்களில் செலவு செய்வதை (வீண்விரயம் செய்தலை) ‘தப்தீர்’ எனும் பதம்
குறிப்பதாக இமாம் கதாதா விவரிக்கின்றார். எனவே, இந்த
விளக்கத்தினூடாகப் பார்ப்பினும், புகைத்தலுக்காகச் செலவு செய்வது வீண்விரயம் என்பது
வெள்ளிடைமலை போன்றதாகும்.
“தனக்குத் தீங்கிழைப்பதோ,
பிறருக்குத் தீங்கிழைப்பதோ கூடாது.” என நபி (ஸல்)
அவர்கள் கூறியதை இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் அறிவிக்க, இமாம் அஹ்மத், இப்னு மாஜா
போன்றோர் பதிவு செய்துள்ளனர்.
மேற்குறித்த நபிமொழி மூலம் தனக்கோ,
பிறருக்கோ தீங்கிழைப்பதை இஸ்லாம் தடை
செய்கின்றது என்பது புலனாகின்றது. சமூக சூழலில் பலர் இத்தகைய பாவச்
செயலை செய்வதையும் அவதானிக்க
முடிகின்றது. மட்டுமல்லாது வீட்டில்
சிறுவர்கள் மத்தியில் புகைத்தலை மேற்கொள்வதால் சூழலியல் ரீதியான
பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றது.
அதேவேளை புகையிலை உடலியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பாதிப்பை உண்டு
பண்ணும் எனும் உண்மையை வைத்தியர்கள்,
துறைசார் அறிஞர்கள் வாயிலாக
ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.
“நபி (ஸல்) அவர்கள் ஆதாரமின்றி பேசுவதையும், அதிகமாகக் கேள்வி
கேட்பதையும், செல்வத்தை வீண்விரயம் தடுத்துள்ளார்கள்” என அபூஹுரைரா
(றழி) அவர்கள் அறிவிக்கின்றார்க்ள. மற்றுமோர் அறிவிப்பில்... “தன் வாழ்நாளை
எவ்வாறு கழித்தான். தன் உடம்பை எதில் அழித்தான். தன் செல்வத்தை எங்கிருந்து
பெற்றான். ஆகிய நான்கு விடயங்கள்
வினவப்படும் வரை ஓர் அடியானின் பாதங்கள்
மறுமை நாளில் நகரமாட்டாது.” என
குறிப்பிடப்பட்டுள்ளது. (ஆதாரம்:
திர்மிதி)
இந் நபிமொழியின் அடிப்படையில் நான்கு விடயங்களுக்கு அவன் மறுமையில் பதில்
சொல்ல வேண்டும்.
01
வாழ்நாள்:
புகைப்பிடிப்பவன் வாழ்நாட்களை வீணாக்கி அழித்துக் கொள்வதனால் இறைவனுக்கு மாறு செய்கிறான்.
02.
அறிவு:
புகைப்பிடிப்பவன் புகைத்தலினால் ஏற்படும் விபரீதங்களையும் அது ஷரீஆவில் தடுக்கப்பட்ட ஒன்று என்பதையும் அறிந்த பின்னரும்
அப்பழக்கத்திலே பிடிவாதமாயிருப்பானாயின் அவனுக்களிக்கப்பட்ட அறிவு
அவனுக்கெதிராகவே மறுமையில் சாட்சி
சொல்லும்.
03.
செல்வம்:
புகைத்தலுக்காக பணம் ஒதுக்குவது,
செல்வத்தைப் பிரயோசனமற்ற வகையில்
வீண்விரயம் செய்வதாகும். செல்வமானது அல்லாஹ் மனிதனுக்கு வழங்கிய
அமானிதம். அதனை அவன் திருப்தியுறும் வகையில்,
ஆகுமான விடயங்களில் செலவளித்தல் அவனது
பொறுப்பாகும்.
04.
உடல்:
மனித உடல், அதனுள் பொதிந்துள்ள பலம்,
சக்தி என்பன அவனது ஒவ்வொரு உறுப்பையும் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு நடக்க பயன்படுத்துவதற்காக
வழங்கப்பட்ட அமானிதங்களாகும்.
இதற்கு மாற்றமாக அவன் தனதுடலை நோய்களின்
பாவங்களின் உறைவிடமாக ஆக்கிக்கொள்ளக் கூடாது. புகைத்தல் எனம்
துறையினூடாக அவனது உடலினுள் ஷைத்தான் நுழைய ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
“கேள்வி, பார்வை, உள்ளம் இவை ஒவ்வொன்றையும் பற்றி அவன் விசாரிக்கப்படுவான்” என அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது.
“யார் வெங்காயம் அல்லது வெள்ளைப் பூண்டை உண்கிறாரோ அவர்
பள்ளியினுள் நுழையாது வீட்டிலே இருந்து கொள்ளட்டும்.” (புகாரி, முஸ்லிம்)
No comments:
Post a Comment